

சென்னை: மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 90.14 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டில் மே மாதத்தில் 90 லட்சத்து 14 ஆயிரத்து 959 பேர் பயணம் செய்துள்ளனர்.
இம்மாதத்தில் அதிகபட்சமாக, மே 18-ம் தேதி 3 லட்சத்து 54 ஆயிரத்து 559 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 42 லட்சத்து 51 ஆயிரத்து 729 நபர்களும், மெட்ரோ பயண அட்டைகளை பயன்படுத்தி 1,863 பேரும், ஒற்றை பயண பேப்பர் க்யூஆர் பயன்படுத்தி 19 லட்சத்து 76 ஆயிரத்து 230 பேரும், ஆன்லைன் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 22 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
டிஜிட்டல் எஸ்.வி.பி. க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, வாட்ஸ்-அப் மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச் சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுன்ட்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித க்யூஆர் பயணச் சீட்டுகளுக்கு இந்தத் தள்ளுபடி கிடையாது. இத்தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.