Published : 17 Nov 2022 07:19 AM
Last Updated : 17 Nov 2022 07:19 AM

ஒருவழிப் பாதையில் எதிர் திசையில் சென்ற கூடுதல் டிஜிபி வாகனத்துக்கு ரூ.500 அபராதம்

சென்னை: திருவான்மியூரில் ஒருவழிப் பாதையில் எதிர் திசையில் சென்ற கூடுதல் டிஜிபியின் வாகனத்துக்கு போக்குவரத்து போலீஸார் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது.

உயர்த்தப்பட்ட அபராத தொகையை சென்னை உட்பட பல பகுதிகளிலும் போக்குவரத்து போலீஸார் கண்டிப்புடன் வசூலித்து வருகின்றனர். ஆங்காங்கே கேமராக்களை நிறுவி, கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து, அதற்கான ரசீது சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கே அனுப்பப்பட்டு வருகிறது. விதிமீறல்கள் நடப்பதை பொதுமக்கள் படம் பிடித்து போக்குவரத்து போலீஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்றால், அதன் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி, 3 நட்சத்திரம் (ஸ்டார்) கொண்ட காவல் துறை உயர் அதிகாரியின் வாகனம் ஒன்று திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் எதிரே ஒருவழிப் பாதையில் எதிர் திசையில் சென்றது. இதை பொதுமக்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து, சென்னை காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர், இணை ஆணையர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அந்த வாகனம், ஐபிஎஸ் அதிகாரியான ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதாவுக்கு ஒதுக்கப்பட்டது என்பதும், அது விதிமீறிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாகனத்துக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. புகார் கொடுத்தவருக்கு இத்தகவலை பதிலாக அளித்து காவல் துறை ட்விட் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x