Published : 15 Nov 2022 04:48 PM
Last Updated : 15 Nov 2022 04:48 PM

மருத்துவக் கல்லூரி கட்டுவதில் முறைகேடு | இபிஎஸ்ஸுக்கு எதிரான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது: லஞ்ச ஒழிப்புத் துறை தகவல்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி | கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதில் முறைகேடு நடைபெற்ற புகாரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு முகந்திரம் உள்ளதால் மேல் நடவடிக்கைக்கு அரசிடம் அனுமதி கேட்கபட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று அரசின் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம், உதகமண்டலம், உள்பட 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் மருத்துவ கல்லூரிகளை கடந்த 2019-20 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 778 சதுடி அடிகளில் கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 9 லட்சத்து 99 ஆயிரத்து 296 சதுர அடிகளில் மட்டுமே கட்டிடம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. 1 லட்சத்து 77 ஆயிரத்து 482 சதுர அடி கட்டிடம் கட்டப்படவில்லை. இதன்மூலம் ரூ.52 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோல 11 மருத்துவக் கல்லூரிகளிலும் பெருந்தொகை முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதில், கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கூட்டுச்சதி செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் (கட்டிடம்) ராஜ்மோகன், முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஆர்.கே.வார்ட்ஸ் ஆகியோருக்கு இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி புகார் அளித்தேன். அந்த புகாரின்பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்தப் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, "மனுதாரர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அரசின் ஒப்பதலை பெற வேண்டியுள்ளது. எனவே, அரசின் ஒப்புதலுக்கு ஊழல் கண்காணிப்பு துறை ஆணையருக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "தமிழ்நாடு காவல் துறையில் இந்த புகார் குறித்து விசாரிப்பதாக கூறும்போது, சிபிஐ விசாரணை ஏன் கேட்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பி, விசாரணையை வரும் டிசம்பர் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x