Published : 15 Nov 2022 07:44 AM
Last Updated : 15 Nov 2022 07:44 AM

கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவக் கல்லூரி விடுதியில் பிரியாணி சாப்பிட்ட 150 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ்

கேளம்பாக்கம்: கேளம்பாக்கத்தில் செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்.டிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்காக கல்லூரியின் விடுதியில் 1,500 மாணவ, மாணவிகள் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மாணவ, மாணவியருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிலையில் சில மாணவர்கள் வாந்திஎடுத்தனர். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து செட்டிநாடு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டு 150 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 6 மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்தகேளம்பாக்கம் போலீஸார் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். இதில் கெட்டுப்போன சிக்கன்மூலமாக செய்யப்பட்ட பிரியாணியால் புட் பாய்சன் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டது முதற்கட்டவிசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் அனுராதா கூறியதாவது: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மருத்துவமனையில் உள்ள உணவு நிறுவனங்களை ஆய்வு செய்தனர். அதில் சுகாதாரமான முறையில் சமையல் கூடம்இல்லாதது தெரியவந்தது. அதேபோல் உணவு பாதுகாப்பு பயிற்சிபெற்ற நபர்கள் யாரும் இல்லை.உணவு பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை. இதனையடுத்து இதுகுறித்து விளக்கம் கேட்டு உணவு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அங்குஉணவுகள் மற்றும் உணவு தயாரிக்கப்படும் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் அனுராதா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x