

புதுடெல்லி: அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டப் பிரிவில் வழக்கு பதியக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக மின்சாரத் துறை அமைச்சரான செந்தில்பாலாஜி, கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதனடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்த 3 புகாரின் அடிப்படையில் நான்கு வழக்குகள் சென்னை எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தன் மீதான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்தார். செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க கூடாது. இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத் துறை சார்பிலும் மனு தாக்கல் செய்யபட்டது. இதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அனைத்து மனுக்களையும் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறை மனுவையும் தள்ளுபடி செய்தது. மேலும், செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார், நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கை மீது மீண்டும் முதலில் இருந்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "செந்தில்பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. மேலும், செந்தில்பாலாஜிக்கு எதிரான புகார்களை மீண்டும் தொடக்கத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுக்கக் கோரி, தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, மனுவை வரும் 18-ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தார். மேலும், மேல்முறையீட்டு வழக்கு விசாரணை குறித்து விசாரணை நீதிமன்றத்துக்கு கடிதம் அளிக்கவும் மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினார்.