

ஈரோடு: பவானிசாகர் அணை முழுக்கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் 105 அடிவரை நீரைத் தேக்க முடியும். நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகபெய்து வரும் மழையால், அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் நேற்று முன் தினம் இரவு 104 அடியை எட்டியது.
அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 104.48 அடியாக இருந்த நிலையில், அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 1,617 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்துக்கு விநாடிக்கு 600 கன அடியும், குடிநீர் தேவைக்காக 150 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது. கீழ்பவானி கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்பட்ட நிலையில், அப்பாசனத்துக்கான நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, கீழ்பவானி கால்வாயில் விநாடிக்கு 600 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை: இந்நிலையில் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும் என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பவானிசாகர் அணை உதவி செயற்பொறியாளர் நேற்று காலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வடகிழக்கு பருவமழை காரணமாக, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் எந்த நேரத்திலும் முழுக் கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலை உள்ளது.
இதனால், அணையிலிருந்து பவானி ஆற்றில் உபரி நீர் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம். எனவே, பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார். அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 104.48 அடியாக இருந்த நிலையில், அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 1,617 கன அடியாக இருந்தது.