உணவுத் தரம் கண்காணிக்க ஹோட்டல்களில் சிசிடிவி பொருத்தக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சுத்தமான, தரமான உணவு சமைக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் எஸ்.நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், "கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள உணவகங்களில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 12 சதவீதத்திற்கும் மேலான உணவகங்கள் போதுமான அளவு தரத்துடன் செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பல உணவகங்களின் சமையலறைகள் சுகாதாரமற்ற முறையில் இருக்கின்றன. உணவு தயாரிக்கும்போது உரிய சுத்தமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவகங்களில் உணவருந்திய சிலருக்கு உணவு விஷமாகி இறந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான உணவகங்களின் சமையலறைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். உணவு சமைப்பதை வாடிக்கையாளர் பார்க்கும் வகையில் தொலைக்காட்சி வைக்கப்பட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவித்ரா, "ஹோட்களில் தரமான சுகாதாரமான பாதுகாப்பான உணவு வகைகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். உணவுப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் முறையாக சோதனை செய்ய வேண்டும். சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை பல ஹோட்டல்கள் செயல்பட்டு வரும் நிலையில், மனுதாரரின் கோரிக்கை சாத்தியம் இல்லை" எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in