Published : 24 Oct 2022 04:40 AM
Last Updated : 24 Oct 2022 04:40 AM

தஞ்சை | தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு - மல்லிகை கிலோ ரூ.2,000

தஞ்சாவூர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூரில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு நேற்று விற்பனையானது.

தஞ்சாவூர் பூக்கார தெருவில் உள்ள பூச்சந்தையில் ஏராளமான பூக்கடைகள் உள்ளன. திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் இங்கு பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். மேலும், தஞ்சாவூர் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து விவசாயிகளும் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கணிசமாக அதிகரிக்கும். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் விலையும் கிடுகிடுவென அதிகரித்து உள்ளது.

தஞ்சாவூர் பூச்சந்தையில் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000-க்கு விற்கப்பட்டது. நேற்று இரண்டு மடங்காக விலை உயர்ந்து கிலோ ரூ.2,000-க்கு விற்பனையானது. இதேபோல, முல்லைப் பூ விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து கிலோ ரூ.2,000-க்கு விற்கப்பட்டது. மேலும், கனகாம்பரம் ரூ.1,500, செவ்வந்தி ரூ.200, அரளி ரூ.300, ஆப்பிள் ரோஸ் ரூ.200-க்கும் விற்பனையாகின.

இது குறித்து பூ வியாபாரி சந்திரசேகரன் கூறியது: தீபாவளி பண்டிகை என்பதால், பூக்களின் விலை அதிகரித்துள்ளது. விலை அதிகரித்தாலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x