பின்னலாடை நிறுவனங்களுக்கு சிறப்பு அவசர கால கடன் உத்தரவாத திட்டம் - உடனே அறிவிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

பின்னலாடை நிறுவனங்களுக்கு சிறப்பு அவசர கால கடன் உத்தரவாத திட்டம் - உடனே அறிவிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Published on

சென்னை: ஆடை துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை போக்கிடும் வகையில் சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை உடனடியாக அறிவிக்கும்படி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மேற்கில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல காரணிகளால் ஆடை ஏற்றுமதி துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மாதந்தோறும் வளர்ச்சி விகிதம் இப்போது சரிவைக் காட்டுகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய சந்தைகளை பூர்த்திசெய்யும் இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை ஏற்றுமதி தொகுப்புகளில் ஒன்றான திருப்பூர் அலகில் 95 சதவீதம் குறு, சிறு நிறு
வனங்கள் உள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கோடை காலத்துக்கான கொள்முதல் ஆணைகள் சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளன. குறைந்த தேவை காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் ஏற்றுமதி பிரிவுகளும் அவற்றின் குறு சிறு நிறுவன விநியோகஸ்தர்களும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். தொழிலாளர்களில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ள கிராமப்புற பெண்களின் வேலைவாய்ப்பு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, நெருக்கடியில் இருந்து மீண்டு வர, ஆடைத் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். புதிய திட்டத்தின் கீழ் 20 சதவீதம் கூடுதல் பிணையற்ற கடன் வழங்கலாம். இந்த கோரிக்கைகள் தொடர்பான சாதகமான பரிசீலனையை நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in