

சென்னை: தொழிலதிபரை கடத்தி ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக எழுந்த புகாரில் திமுக பெண் கவுன்சிலர் உட்பட 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் அமர்ராம் (53). தொழிலதிபரான இவர், மெரினா காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: சொந்தமாக அடகுக் கடை நடத்தி வருகிறேன். சென்னையை அடுத்த நாவலூரில் 58 சென்ட் நிலத்தை கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து வாங்கியிருந்தேன். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.25 கோடி என்பதால் அதை திரும்பக் கேட்டு கிருஷ்ணமூர்த்தி மிரட்டி வந்தார். இந்த நிலம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியின் தம்பி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி, மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே வருமாறு வழக்கறிஞர் ஒருவர் மூலம் என்னிடம் பேசினர். நானும் கலங்கரை விளக்கம் அருகே சென்றேன்.
அப்போது அடையாளம் தெரியாத சிலர் என்னை கத்திமுனையில் மிரட்டி காரில் கடத்திச் சென்றனர். பின்னர், என்னை மிரட்டி திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து, ஏற்கெனவே என்னிடம் விற்ற நிலத்தை வலுக்கட்டாயமாக மீண்டும் எழுதி வாங்கிக் கொண்டனர். கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவியும் சென்னை மாநகராட்சி 124-வது வார்டு திமுக கவுன்சிலருமான விமலா உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டனர். என்னை அடித்து, விரட்டி விட்டனர். ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை என்னிடம் இருந்து அபகரித்துக் கொண்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத் தரவேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்தனர். இந்நிலையில், பெண் கவுன்சிலர் விமலா, அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.