Published : 19 Oct 2022 04:20 AM
Last Updated : 19 Oct 2022 04:20 AM

கொள்ளிடத்தில் விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு: சிதம்பரம் தீவு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது

கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடலூர்

கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் சிதம்பரம் அருகே தீவு கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், உபரி நீர் விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது.

பவானிசாகர் பகுதியில் பெய்யும் மழையும், கொள்ளிடம் ஆற்றில் அந்தந்த பகுதியில் பெய்யும் மழை நீருடன் சேர்ந்த உபரி நீரும் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் 8 அடி தண்ணீரை மட்டுமே தேக்க முடியும் என்பதால் நேற்று முன்தினம் மதியம் விநாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு வெள்ள நீர் சென்றது.

மேலும் கொள்ளிட ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் செல்வதால் சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி ஆகிய கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இப்பகுதி மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இக்கிராமங்களில் வருவாய், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். மேலும் நீர்வளத்துறை கொள்ளிடம் வடி நில கேட்ட சிதம்பரம்செயற்பொறியாளர் காந்தரூபன்தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் அணைக்கரை குமார், சிதம்பரம் ஞானசேகர் மற்றும் உதவிப்பொறியாளர்கள், நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் கொள்ளிடக் கரை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x