திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Updated on
2 min read

திருச்செந்தூர் கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் மத்தியில், சுவாமி ஜெயந்தி நாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமானதாகும். சூரபத்மனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த இடம் என்பதால், இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை, மூலவருக்கு உச்சிகால பூஜை, உற்சவர் சுவாமி ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை, தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருதல், திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், தங்க ரதத்தில் கிரி வீதி உலா போன்ற பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.

விழா தொடங்கியது முதல் 6 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரிலேயே தங்கி சஷ்டி விரதம் இருந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் இதர கால வேளை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜையும், உற்சவர் சுவாமி ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்தது.

பின்னர் தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை யில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேளவாத்தியங் களுடன் சண்முகவிலாசம் சேர்ந் தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிய ளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

மாலை 4.30 மணியளவில் சூரபத்மனை வதம் செய்வதற்காக சஷ்டி மண்டபத்தில் இருந்து கடற்கரைக்கு சுவாமி ஜெயந்திநாதர் புறப்பட்டார். தொடர்ந்து சூரசம் ஹாரம் தொடங்கியது. முதலில், கஜ முகத்துடன் வந்த சூரபத்மன், சுவாமியை மூன்று முறை வலம் வந்து போரிட்டான். அவனை, மாலை 4.47 மணிக்கு ஜெயந்திநாதர் வதம் செய்தார். இரண்டாவதாக சிங்க முகத்துடன் வந்த சூரனை 5.12 மணிக்கும், மூன்றாவதாக சுய ரூபத்துடனும் போரிட்ட சூரபத் மனை 5.27 மணிக்கும் வதம் செய் தார். பின்னர் மா மரமாக மாறிய சூரனை சேவலாகவும், மயிலாக வும் மாற்றி தன்னுள் ஆட்கொண் டார் ஜெயந்திநாதர். அப்போது பக்தர்கள் எழுப்பிய `வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷம் விண்ணை எட்டியது.

சூரசம்ஹாரத்தை காண லட்சக் கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடியிருந்தனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் அவர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர். வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக் கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சுவாமி பூஞ்சப் பரத்தில் கிரி பிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். இரவு 108 மகாதேவர் சந்நிதி முன் சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடு கள் வழங்கப்பட்டன. விழாவில் இன்று திருக்கல்யாணம் நடைபெறு கிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண் டன், இணைய ஆணையர் தா.வரதராஜன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in