இலக்கு நிர்ணயிக்க வேண்டும் - உதயநிதி எம்எல்ஏ

இலக்கு நிர்ணயிக்க வேண்டும் - உதயநிதி எம்எல்ஏ
Updated on
2 min read

கட்சியின் சார்பு அணிகளுக்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கூறினார்.

திமுக பொதுக் குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது: தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் எப்படி கட்சித் தேர்தலை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்தி முடித்திருப்பாரோ அந்த வழியிலேயே தேர்தலை நடத்திக் காட்டிய தலைவருக்கு நன்றி. நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றி நிச்சயமாகத் தொடரும். நாம் அடைந்தவெற்றிக்கு அவரது 50 ஆண்டுக் கால உழைப்பு, தொண்டர்களின் முயற்சி, மக்கள் மிக முக்கியமான காரணம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

கருணாநிதியிடம் கற்ற பாடம் - துரைமுருகன்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கற்ற பாடங்களை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக் கூறும் உரிமை எனக்கு உண்டு என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறினார். அவர் பேசியதாவது: திமுகவில் அண்ணா, நாவலர், அன்பழகன் பொதுச் செயலாளர்களாக இருந்தனர். இந்த மூவருக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க பட்டியலில் என்னை 4-வது பொதுச் செயலாளராக அமர வைத்த ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பேன். அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி இந்திய துணைக் கண்டத்தையே ஆட்டிப் படைக்கும் அளவில் சிறந்த முதல்வராக இருந்தார். அவர் நினைத்தவர்கள்தான் குடியரசுத் தலைவர், பிரதமராக வந்தனர். ராஜ ராஜ சோழன் திறமைசாலியாக இருந்தபோதும் அவரது சாம்ராஜ்யம் தமிழகத்தைத் தாண்டவில்லை. ஆனால், பின்னர் வந்த ராஜேந்திர சோழன் கடல் கடந்து சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினான். கருணாநிதிகூட முதல்வரான பிறகு அரசியல் சாணக்கியத்தை காட்டிய பிறகுதான் பிரபலமானார். ஆனால் டெல்லிக்கு போகாமலே பிரபலமானவர் ஸ்டாலின். கருணாநிதியிடம் கற்ற பாடங்களை ஸ்டாலின் பணியாற்றும்போது சொல்வதற்கு எனக்கு உரிமை உண்டு. மேலும் அரசியல் சாணக்கிய தன்மையோடு பல வெற்றிகளை ஸ்டாலின் ஈட்டித் தருவார்.

ஸ்டாலினுக்கு பேனா பரிசளிப்பு: திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு, கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், அரிய வகை மாண்ட் பிளாங்க் பேனாவை பரிசளித்தார். அப்போது துரைமுருகன், “மாண்ட் பிளாங்க் பேனாவை பரிசாக அளிக்கிறேன். இதில்தான் அவர் கையெழுத்திட வேண்டும். இதில்தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்திகளை வெளியிட வேண்டும்” எனக்கூறி ஸ்டாலினின் சட்டைப் பையில் வைத்தார்.

பொதுக்குழுவில் ஒப்புதல்: கட்சியின் சுற்றுச்சூழல் அணி மற்றும் அயலக அணி புதிதாக உருவாக்கப்பட்டதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் மகளிராக இருக்க வேண்டும் என்பதற்கும் ஒப்புதல் தரப்பட்டது. இதேபோல் தொழிலாளர் அணி தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், தலைமையின் ஒப்புதல் பெற்ற பிறகே இது தொடர்பான ஆவணங்களை தொழிலாளர் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

உதயநிதிக்கு ஸ்டாலின் பாராட்டு: திமுக தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் ஸ்டாலின்,தனது உரையில் இளைஞரணிச் செயலர் உதயநிதியைப் பாராட்டினார். அவர் பேசியதாவது: இளைஞரணிச் செயலர் உதயநிதிமுன்னெடுப்பால் பல்வேறு இடங்களில் திராவிட மாடல் பாசறைக்கூட்டங்கள் நடைபெற்று வருவதுமன நிறைவைத் தருகிறது. இளைஞர்களுடன் உரையாடி, கட்சிக் கொள்கையின்முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுங்கள். வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒவ்வொருவரிடமும் பரப்புரை செய்யுங்கள். கட்சியின் மீது வன்மத்துடன்பரப்பப்படும் அவதூறுகளுக்கான பதிலடிகளை, வீடியோக்களாக, படங்களாக அனைவரிடமும் கொண்டுசேருங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in