இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் 282 பேர் பாதிப்பு - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் 282 பேர் பாதிப்பு - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் 282 பேர் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது எச்1என்1 (H1N1) எனப்படும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அதிகம் பரவிக்கொண்டிருப்பதாகவும், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காக, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அரசு மருத்துவமனைகளில் 13 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 215 பேரும், வீட்டு தனிமையில் 54 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மொத்தம் 837 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 637. இவர்களில் 129 பேர் மட்டும்தான் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 18 பேர் டெங்கு காய்ச்ச
லுக்கும், மற்ற 121 பேர் சாதாரண காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு யாருக்கும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு இல்லை.

நோய்த் தொற்றின் அறிகுறிகள்: காய்ச்சல், தும்மல், இருமல், சளி, தலைவலி, தொண்டை வலி, உடல் சோர்வு போன்றவை இன்ஃப்ளுயன்சா நோய்த் தொற்றின் அறிகுறிகள் ஆகும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்ததன் காரணமாக, இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமிகளின் தாக்கம் தமிழகத்தில் இல்லாமல் இருந்தது. இதுவரை தமிழகத்தில் 243 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பாதிப்பை குறைக்கவும், கொசுக்களை கட்டுப்படுத்தவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

பதற்றம் ஏற்படுத்த வேண்டாம்: குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பெற்றோர் அழைத்துச் செல்ல வேண்டும். பெரிய அளவில் காய்ச்சல் குறித்து தவறான கருத்துகளை பரப்பி, யாரும் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

ஒரு மாதத்தில் 8 பேர் உயிரிழப்பு?: தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 8 பேர் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, டெங்கு பாதிப்பிலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட நகரங்களில் கரோனா அதிகரித்து வரும் நிலையில், அதன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால், ப்ளூ காய்ச்சல் பாதிப்பில் இருந்தும் தப்பிக்கலாம் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in