Published : 16 Sep 2022 04:37 AM
Last Updated : 16 Sep 2022 04:37 AM

ஜூலை 11-ல் நடந்த மோதல் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி மீண்டும் விசாரணை

சென்னை: ஜூலை 11-ம் தேதி நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸார் 2-வது முறையாக விசாரணை மேற்கொண்டனர்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம், பழனிசாமி ஏற்பாட்டில் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது, ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில், 47 பேர் காயமடைந்தனர். பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த வன்முறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், இந்த வழக்குகளின் விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி சிபிசிஐடி போலீஸார், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கலவரத்தின்போது காவல் துறையினரால் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

தடயங்கள் சேகரிப்பு: அலுவலகத்தில் என்னென்ன பொருட்கள் மாயமாகின, எந்தெந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டு, அதிமுக அலுவலகத்தில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆய்வு மற்றும் விசாரணை நடந்தது. இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்துக்கு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அலுவலக மேலாளர் ஆஜர்: அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மகாலிங்கம் தனது வழக்கறிஞர்களுடன் நேற்று முன்தினம் காலை ஆஜரானார். அவரிடம் போலீஸார் பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றனர். இந்நிலையில், சிபிசிஐடி ஆய்வாளர் லதா தலைமையிலான போலீஸார், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மீண்டும் ஆய்வு செய்தனர். பல மணி நேரம் நீடித்த இந்த ஆய்வின்போது வழக்கு தொடர்பாக பல முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வன்முறை சம்பவம் தொடர்பாக அங்கு இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x