நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை: உயர் நீதிமன்றம் உத்தரவு 

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்
Updated on
1 min read

மதுரை: குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர். இவர் ட்விட்டரில், ‘நீதித் துறை ஊழல் கறை படிந்திருக்கிறது’ என கருத்து பதிவு செய்தார். இதற்காக அவர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர், ”நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை. நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுத்ததற்கான காரணமாக குறிப்பிடும் வீடியோ பதிவுகள் மற்றும் பிற பதிவுகளை எனக்கு வழங்க வேண்டும்” என்றார். மேலும் அவர், ”‘நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் நேரில் ஆஜரானார்.

இந்த வழக்கில் அமிகஸ்கியூரியாக (நீதிமன்றத்துக்கு உதவி செய்பவர்) நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் சோமயாஜி காணொலி வழியாக வாதிடுகையில், ”சவுக்கு சங்கர் பேசியதும், எழுதியதும் நீதிமன்ற அவமதிப்பு. இதற்காக அவரை தண்டிக்க வேண்டும்” என்றார். இதையடுத்த தீர்ப்பை மாலைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மாலையில் நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்றம் தொடர்பான அவரது கருத்துகளை சமூக வலைதளங்களில் நீக்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

சவுக்கு சங்கர் இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிக்கை வைத்தார். ஆனால், நீதிபதிகள் அதை நிராகரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in