குமரியில் 2-வது நாளாக ராகுல் காந்தி நடைபயணம்: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

குமரியில் 2-வது நாள் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி
குமரியில் 2-வது நாள் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி
Updated on
2 min read

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை 2-வது நாளாக அகஸ்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். சுசீந்திரம், நாகர்கோவில் வரும் வழியில் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் நடைபயணம் துவங்கிய பின் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு வந்து கேரவன் வேனில் தங்கினார். இதைப்போல் அவருடன் நடைபயணம் மேற்கொள்ளும் மேலும் 119 பேரும் கேரவனிலே தங்கினர். 2-வது நாள் நடைபயணத்தை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து இன்று காலை 7.15 மணியளவில் ராகுல் காந்தி தொடங்கினார். அப்போது அவரை மூத்த காங்கிரஸ் நிர்வாகியான குமரி அனந்தன் சந்தித்து பேசினார். அவரது உடல் நலம் குறித்து ராகுல் காந்தி விசாரித்தார்.

தேசியக் கொடியை ஏந்தியாவாறு நடைபயண குழுவினருடன் ராகுல் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது சாலையோரம் நின்ற பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் ராகுல் காந்தியை பார்த்து உற்சாகமாக கையசைத்தனர். இதனால் அவர்கள் அருகில் சென்று பேசினார். ஒரு மணி நேரத்தில் கொட்டாரம் சந்திப்பை நடைபயண குழுவினர் அடைந்தனர்.

அங்கிருந்து பொற்றையடி, ஈத்தங்காடு, வழுக்கம்பாறை வழியாக காலை 10.30 மணியளவில் சுசீந்திரம் எஸ்.எம்..எஸ்.எம். பள்ளியை அடைந்தார். அவர் வரும் வழியில் சாலையோரம் நின்ற மக்கள் ராகுல் நடைபயணத்தை செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளி்ப்படுத்தினர். தொண்டர்கள் வழங்கிய இளநீரை நடைபயணத்தின்போது வாங்கி பருகினார்.

ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, செல்லகுமார், ஜெயக்குமார், திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ.க்கள் ரூபிமனோகரன், ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

ஓய்விற்கு பின்னர் மாலை 4 மணியளவில் சுசீந்திரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி மற்றும் குழுவினர் நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக மாலையில் ஸ்காட் கல்லூரியை அடைந்தனர்.

3வது நாள் நடைபயணத்தை நாளை ராகுல் காந்தி ஸ்காட் கல்லூரியில் இருந்து தொடங்குகிறார். அவர் பார்வதிபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான சுங்காங்கடை, வில்லுக்குழி வழியாக புலியூர்குறிச்சியை மதியம் அடைகிறார். அங்கிருந்து தக்கலை மேட்டுக்கடை மசூதி வழியாக முளகுமூடு புனித மேரி ஐசிஎஸ்இ பள்ளியை அடைகிறார்.

4வது நாள் நடைபயணம் 10ம் தேதி முளகுமூட்டில் இருந்து துவங்கி மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியை மதியம் அடைகிறது. அங்கிருந்து மாலையில் குழித்துறை சந்திப்பு, படந்தாலுமூடு வழியாக கேரள பகுதியான தலைச்சன்விளையை அடைகிறது. ராகுல் காந்தி நடைபயண குழுவினருடன் வழிப்பாதையில் அதிகமான காங்கிரஸ் தொண்டர்களும், இளைஞர்களும் இணைந்தனர்.

காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், தொண்டர்களை உற்சாகமடைய செய்யும் விதத்திலும் ராகுல்காந்தி எம்.பி. `பாரத் ஜோடோ யாத்ரா` என்னும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை நேற்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கினார். நடைபயணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்களில் 3500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in