மேட்டூர் அனல் மின் நிலையப் பணிகள் தொடர்பான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் பல்வேறு பணிகளுக்காக கோரப்பட்ட டெண்டரை எதிர்த்து அதிமுக முன்னாள் கவுன்சிலர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மேட்டூர் நகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் தங்கப்பன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், " மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் மேற்கொள்ளப்படும் 36 வகையான பணிகளுக்கு தனித்தனியாக நான்கு மாதங்களுக்கு டெண்டர்கள் வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது.

இந்த நடைமுறையை மாற்றி ஐந்து ஆண்டுகளுக்கு சேர்த்து அனைத்து பணிகளையும் ஒரே ஒப்பந்ததாரரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைப்படி ஐந்து ஆண்டுகளுக்கு 155 முதல் 160 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு சதவீத முன்பணமாக 3 கோடியே 99 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான செலவு என்பது 399 கோடி ரூபாயாக இருக்கும்.

டெண்டர் கோரும் முன் அதற்கான மதிப்பீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. எனவே, இந்த டெண்டரை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசு மற்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முக சுந்தரம் மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர், "மனுதாரர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு அரசியல் நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெண்டர் நடவடிக்கைகளால் அரசுக்கு எப்படி இழப்பு ஏற்படும் என்பதை மனுதாரர் விளக்கவில்லை. டெண்டர் நிபந்தனைகளை பொறுத்தவரை அது அரசின் கொள்கை முடிவு. டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளுக்கு முரணாக டெண்டர் நிபந்தனைகள் இல்லை. எனவே இதில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in