சென்னை திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணங்களை மறு நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் குறைவாக உள்ளதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கம் சார்பில் 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், "சென்னை சென்ட்ரல் நிலையம், பிராட்வே பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், விமான நிலையத்தில் 150 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொள்ளாமல், திரையரங்குகளில் வாகன நிறுத்தத்திற்கு குறைவான தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது" என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டி, 2017-ம் ஆண்டு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வாகன நிறுத்தக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in