Published : 30 Aug 2022 06:35 PM
Last Updated : 30 Aug 2022 06:35 PM

மலிவான விளம்பரத்திற்காக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டுகிறது: ஐகோர்ட்டில் இபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: தமது புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

கடந்த 2019 முதல் 2021-ம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தலைமைச் செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22-ம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது. நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் அமைப்பதற்காக இந்த டெண்டர்களில் சேர்த்து திட்டமதிப்பு அதிகப்படுத்தப்பட்டது. இதனால் அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது.

இதனால் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், "மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிட அறப்போர் இயக்கம் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென அறப்போர் இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞரை வாதிட உத்தரவிட்டார். இதனையடுத்து வாதிட்ட இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், "எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது.

ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அந்த நிறுவனமே டெண்டரில் கலந்துகொள்ளவில்லை. டெண்டரில் கலந்து கொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. மனுதாரருடைய புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் இதுபோல குற்றம்சாட்டப்படுகிறது. தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கம் நேரடியாக ஊடகங்களில் குற்றச்சாட்டுகளை வைப்பதே தவறு. முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் சமூக வலைதளங்களில் ஒரு குற்றச்சாட்டை கூறும் முன் அதை உறுதிப்படுத்த வேண்டும். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நபர் குறித்து அவதூறு கருத்துகளை கூறிவிட்டு அதற்கு இழப்பீடு கொடுத்தாலம் ஈடுசெய்ய முடியாது. ஆதாரமின்றி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக கூறுவது மான நஷ்ட வழக்கிற்கு உட்பட்டது. எனவே மனுதாரர் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் செப்டம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x