இரு குடும்பங்களுக்கும் உறவான கோபாலபுரம் வீடு நட்பு பாலமாய் உயர்ந்தது: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

இரு குடும்பங்களுக்கும் உறவான கோபாலபுரம் வீடு நட்பு பாலமாய் உயர்ந்தது: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
Updated on
1 min read

சென்னை: கோபாலபுரம் வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு விற்பனை செய்த குடும்பத்தினர் அந்த வீட்டை பார்வையிட்டது குறித்த செய்தியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"வீடு என்பது பலரது கனவு.கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன. எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு. தலைவர் கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு.

இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. தலைவர் கலைஞர் கோபாலபுரம் வீட்டை சரபேஸ்வரர் அவர்களிடம் 1955-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார்.

அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தைக் கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திட ஒப்புக்கொண்டார் தலைவர் கலைஞர்.

அன்று தனக்குத் திருமணமான கோபாலபுரம் வீட்டைக் காண, அமெரிக்காவிலிருந்து திரும்பிய சரோஜா சீதாராமன் அவர்கள் விரும்பியதை ஊடகங்கள் வழியே அறிந்தேன். அவரது குடும்பத்தினரைக் கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.

இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நின்று எங்களை அன்போடு பார்த்தது" என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in