மேச்சேரி அருகே மழையால் வீட்டுச் சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு

மேச்சேரி அருகே சாத்தப்பாடி ராக்கன் காலனி பகுதியில் மழையினால் வீட்டின் சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழந்த வீடு.                               படம்: எல்.பத்மநாபன்
மேச்சேரி அருகே சாத்தப்பாடி ராக்கன் காலனி பகுதியில் மழையினால் வீட்டின் சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழந்த வீடு. படம்: எல்.பத்மநாபன்
Updated on
1 min read

மேட்டூர்: மேச்சேரி அருகே, மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள சாத்தப்பாடி ராக்கன் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (75). இவரது கணவர் குழந்தைசாமி இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு மேச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதில் செம்மண்ணால் கட்டப்பட்டிருந்த கோவிந்தம்மாள் வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்கியதால் சுவர் நனைந்து திடீரென இடிந்து, வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி மீது விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி அவர் உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் மூதாட்டியின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து மேச்சேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in