Published : 26 Aug 2022 06:45 AM
Last Updated : 26 Aug 2022 06:45 AM

அதிமுக அலுவலக மோதல் தொடர்பான 4 வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை

அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பான 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், சீல் அகற்றப்பட்டு இபிஎஸ் வசம் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது.

இதன் பிறகு, மோதல் சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு சாவி எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, உள்ளே சென்று பார்த்தோம். அப்போது கட்சியின் சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர் பாகங்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை காணவில்லை. அவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதாக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட ராயப்பேட்டை போலீஸார் ஒப்புகைச்சீட்டுகூட தரவில்லை. பிறகு உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பிறகே, புகாரை பெற்றுக்கொண்டதற்கான சான்றை அளித்தனர்.

ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அளித்த புகாரை போலீஸார் விசாரிக்கவில்லை. எனவே, இதுதொடர்பாக நாங்கள் அளித்த புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது அரசு தரப்பில், ‘அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம், ஆவணங்கள் மாயம் தொடர்பாக ராயப்பேட்டை போலீஸார் பதிவு செய்துள்ள 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டு, அதன் உத்தரவு நகல் சமர்ப்பிக்கப்பட்டது.

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது குறித்து தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்.19-க்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x