Published : 26 Aug 2022 10:44 AM
Last Updated : 26 Aug 2022 10:44 AM

விநோத நோயால் அவதிப்படும் சகோதரிகள்: அரூர் எம்.எல்.ஏ. சிகிச்சைக்கு ஏற்பாடு

அரூர் அருகே விநோத நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அரூர் எம்எல்ஏ சம்பத்குமாா் சந்தித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தாா்.

அரூர்

அரூர் அருகே உடல் முழுவதும் கொப்பளங்கள் வருவதும், உடைந்து காயம் ஏற்படுவதுமாக அவதிப்பட்டு வரும் 2 பெண் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அரூர் எம்எல்ஏ நடவடிக்கை எடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளிமதுரை பகுதியைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த முனியன்-கமலா தம்பதிக்கு, திருமலர் (11, குறைந்த செவித்திறன் கொண்டவர்), தேவசேனா (4) என்ற 2 மகள்கள் உள்ளனர். முனியன் உடல்நலம் பாதிக்கப்பட்டவர். அவரது மனைவி கூலி வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார்.

புறம்போக்கு நிலத்தில் சிறிய வீடு அமைத்து, மின்சார வசதியின்றி, கதவுகள் கூட இல்லாத நிலையில் வசிக்கின்றனர். இந்நிலையில், 2 குழந்தைகளும் பிறந்ததிலிருந்தே விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு ஆங்காங்கே தீயிட்ட கொப்பளம் போல் வருவதும், சிறிது நேரத்தில் அது உடைவதுமாக இருக்கிறது.

மேலும் இந்த கொப்பளங்கள் உடைந்தவுடன், காயங்கள் ஏற்படுகின்றன. பின்னர் காயம் ஏற்பட்ட இடம் வெள்ளை தழும்பாக மாறி விடுகிறது. தலை முதல் கால் வரை இதுபோல் கொப்பளங்கள் வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணப்படுத்த முடியாது எனக் கூறி மருந்துகளை தற்காலிகமாக மட்டுமே கொடுக்கின்றனர்.

இதனால் குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். 6-ம் வகுப்பு படிக்கும் திருமலர், உடல் முழுவதும் கொப்பளங்கள் வருவதால், நடக்க முடியாத நிலையிலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் சிரமத்தோடு பள்ளிக்கு நடந்து சென்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார், நேற்று முனியன் வீட்டுக்குச்சென்று திருமலர், தேவசேனா ஆகியோரை பார்த்து நலம் விசாரித்தார். உடனடியாக தருமபுரி சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் ராஜேஷ் கன்னாவை தொடர்பு கொண்டு சிறுமிகளின் நோய்க்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, மருத்துவர், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் அரூர் அரசு மருத்துவமனையிலும், மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் கூறும்போது, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் குணமாகவில்லை எனில் சென்னைக்கு அழைத்துச் சென்று உயர் சிகிச்சை அளிக்கப்படும். உடனடியாக இலவச வீடு, வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x