கனல் கண்ணன் ஜாமீன் கோரிய வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

கனல் கண்ணன் ஜாமீன் கோரிய வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
Updated on
1 min read

சென்னை: ‘பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்று பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் ஜாமீன் கோரிய வழக்கை தீர்ப்புக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சி நிபுணர் கனல் கண்ணன், ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்பதாக பேசியிருந்தார். இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கனல் கண்ணன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து, புகார்தாரர் த.பெ.தி.க. குமரன் தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இடையீட்டு மனுதாரர் தரப்பில், "பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதோடு மட்டுமின்றி பிறரையும் தூண்டும் வண்ணம் பேசியிருப்பது திட்டமிட்டே வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. வெறுப்பு பேச்சு தான் பல நாடுகளில் இனப்படுகொலைகள் ஏற்பட காரணமாக இருந்தது. எனவே மனுதார் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேம்டும் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in