Published : 25 Aug 2022 04:35 AM
Last Updated : 25 Aug 2022 04:35 AM

பெரியார் கல்லூரி துறைத் தலைவர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி அமைப்பு

திருச்சி

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.ஏ. படித்த மாணவி ஒருவர், ஒரு துறைத் தலைவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில், புகாரில் உண்மை இருப்பதாக தெரியவந்ததால், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆக.3-ம் தேதி கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், இதுவரை அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் 17 பேரும்நேற்று முன்தினம் கல்லூரி முதல்வரைச் சந்தித்து, துறைத்தலைவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் கடிதம் கொடுத்தனர்.

அக்கடிதமும் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கல்லூரிக்கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவின்பேரில், கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் மேகலா தலைமையில் மாவட்ட சமூக நலஅலுவலர், தன்னார்வ அமைப்புஉறுப்பினர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு 10 நாட்களுக்குள் விசாரணை நடத்தி இயக்குநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என இணை இயக்குநர் மேகலா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x