

ராமேசுவரம் அருகே மண்டபம் முகாமில் கர்ப்பிணி மனைவிக்கு நாவல் பழம் பறிக்கச் சென்ற கணவர் போலீஸ்காரரால் தாக்கப்பட்டார்.
இலங்கை வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரக்குமார் கோடீஸ் வரன் (27). இவரது மனைவி கஸ்தூரி (20), கர்ப்பிணி. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏப்.10-ம் தேதி அகதியாக தனுஷ்கோடி வந்த இவர்கள், மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏப். 14 அன்று முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது கர்ப்பிணியான கஸ்தூரியிடம் தங்கள் குழந்தை தமிழகத்தில் நல்லபடியாக பிரசவிக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை தனது 8 மாத கர்ப்பிணி மனைவிக்கு மண்டபம் முகாமில் இருந்த ஒரு நாவல் பழ மரத்தில் பழங்களை பறித்துக் கொண்டிருந்த கணவர் இந்திரக்குமார் கோடீஸ்வரனிடம் சீருடை அணியாத போலீஸ் காரர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். அப்போது, அந்த காவலர் மது போதையில் இருந்துள்ளார்.
இந்தச்சம்பவத்தால் கவலை யடைந்த முகாமிலிருந்த இலங்கை தமிழர்கள், போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தனித் துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை மண்டபம் மறுவாழ்வுத் துறை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பினர்.
தொடர்ந்து அகதிகளிடம் அத்துமீறிச் செயல்படும் போலீஸார், அதிகாரிகள் மீது மத்திய, மாநில அகதிகள் மறுவாழ்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.