கைதான நிலையில் உடல்நிலை பாதிப்பு: சிகிச்சைக்குப் பின் கே.பி.ராமலிங்கம் சேலம் சிறையில் அடைப்பு

கேபி ராமலிங்கம் | கோப்புப் படம்
கேபி ராமலிங்கம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் சிகிச்சை முடிந்த நிலையில், போலீஸாரால் சிறையில் அடைக்கப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயத்தின் நுழைவுவாயில் பூட்டை உடைத்த விவகாரத்தில், பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை போலீஸார் கைது செய்தனர்.

கே.பி.ராமலிங்கத்துக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால், பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் கே.பி.ராமலிங்கம் சேர்க்கப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க பென்னாகரம் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலம் அடைந்த கே.பி.ராமலிங்கத்தை, போலீஸார் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், கே.பி.ராமலிங்கம் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகக் கூறி, சிறைக்கு செல்ல மறுத்தார்.

மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து டிஸ்சார்ஜ் செய்தனர். இதையடுத்து, போலீஸார் கே.பி.ராமலிங்கத்தை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in