

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளாததால் சிமென்ட் தளம் பெயர்ந்து சேதமடைந்துள்ளதாகவும், சுகாதாரமற்ற கழிப்பறைகளால் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் பொது மக்கள் புகார் தெரிவிக்கின் றனர்.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, கோவை, மதுரை,திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தற்போதுள்ள இடத்தில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் புதிய பேருந்து நிலையம் செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பயணிகளின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை, சாலை, பயணிகள் நிழற்கூரை உள்ளிட்டவை படிப்படியாக அமைக்கப்பட்டன. ஆனால், அவை போதுமானதாக இல்லை.
திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் துர்நாற்றம், ஆங்காங்கே தேங்கும் கழிவுநீர் போன்றவற்றால் சுகாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. சென்னை-பெங்களூரு நகரங் களுக்கு இடையில் மிக வேகமாக வளர்ந்துவரும் நகரமாக வேலூர் இருக்கிறது. மாநகராட்சி அந்தஸ்து இருந்தாலும் வளர்ச்சியில் மட்டும் பின்தங்கியே இருக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் இரண்டு இலவச சிறுநீர் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஒர் உயர்மின் விளக்கு கோபுரம், ஆட்டோக்கள் செல்லும் தரைத்தளம் அமைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்ட இரண்டு கழிப்பறையும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய கழிப்பறையும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
சேதமடையும் தரைத்தளங்கள்
புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தபிறகு மழை நீர் மற்றும் கழிவுநீர் செல்லும் கால்வாய் அமைக்கப்பட்டது. சிமென்ட் தளம் மற்றும் தார்சாலை அமைக்கப்பட்டது. வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால் கழிவுநீர் கால்வாய்கள் மீது போடப்பட்ட சிமென்ட் சிலாப்புகள் உடைந்து சேதமடையத் தொடங்கிவிட்டன.
அதை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், சிமென்ட் தளமும் கொஞ்சம் கொஞ்ச மாக சேதமடைந்து வருகிறது. இதனால், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடை யூறாக உள்ளது. அதைக் கூட சரி செய்வதற்கான எந்த முயற்சி யையும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
‘‘சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்குவதற்கு சில நாட்கள் முன் பேருந்து நிலையத்தில் குண்டும் குழியுமாக காட்சியளித்த சாலைகளை அவசர அவசரமாக சரி செய்தனர்.
மேலும், செல்லியம்மன் கோயில் பின்புறம் பேருந்துகளை நிறுத்த வசதியாக விரிவாக்கப் பணிகள் தொடங்கினர். 6 மாதங்களாகியும் அந்தப் பணி நடைபெறவில்லை. ஸ்மார்ட் சிட்டியாக வேலூரை அறிவித்துவிட்டார்கள். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதாகக் கூறி 5 ஆண்டுகள் கடந்துவிட்டன.
வேலூர் புதிய பேருந்து நிலை யத்தில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்தினால் நிச்சயம் நோய்த் தொற்று ஏற்படும். இலவச குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, பயணிகள் அமர்ந்து செல்ல போதுமான வசதியை ஏற்படுத்துவதை குறைந்தபட்ச செயல்திட்டமாக செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்’’ என பொதுமக்கள் கூறுகின்றனர்.