Published : 06 Oct 2016 09:56 AM
Last Updated : 06 Oct 2016 09:56 AM

6 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத ‘கலைமாமணி’ விருதுகள்: மாவட்ட அளவிலான விருதுகளும் வழங்கவில்லை

நடிகர், நடிகைகள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்துறை கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு வழங்கும் ‘கலைமாமணி’ விருதுகள் கடந்த 6 ஆண்டுகளாக யாருக்கும் வழங்கப்படாமல் உள்ளது.

கலை, பண்பாட்டை வளர்ப்பதற் காகவும் தொன்மையான கலை வடிவங்களைப் பேணிக் காக்கவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் 1959-ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிவாஜி கணேசன், எம்ஜிஆர், கருணாநிதி, முரசொலி மாறன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், எம்.எஸ்.விஸ்வ நாதன், இளையராஜா உள்ளிட்ட 1,079 கலைஞர்களுக்கு இதுவரை கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். கடைசி யாக கடந்த 2010 மே மாதம் நடந்த விழாவில் அனுஷ்கா, தமன்னா, ஆர்யா, திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்ட 26 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு, கடந்த 6 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாட்டுப்புறக் கலைஞர்கள் சிலர் கூறியதாவது:

நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கான நலத் திட்டங்களைச் செய்து கொடுப்பதற் காக அனைத்து மாவட்டங்களிலும் கலை பண்பாட்டுத் துறை மையங் கள் செயல்பட்டு வருகின்றன. தகுதி யான நபர்களை அடையாளப் படுத்தி உறுப்பினர் அட்டைகளை வழங்குவதுதான் இந்த மையங் களின் பணி. இந்த மையங்களை ஒருங்கிணைக்க தமிழக அளவில் தஞ்சை, திருச்சி, சேலம், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை என 6 மண்டல அலுவலகங்கள், துணை மற்றும் உதவி இயக்குநர்களின் பொறுப்பில் செயல்படுகின்றன.

கிராமியக் கலைஞர்களுக்காக மாவட்ட அளவில் கலைமணி, கலைசுடர்மணி, கலை வளர்மணி, கலைநன்மணி, கலைமுதுமணி ஆகிய விருதுகள் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் வயதுவாரியாக கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றால்தான் மாநில அளவிலான கலைமாமணி விருதுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், மாவட்ட அளவில் வழங்கப்படும் விருதுகளையே பல வருடங்களாக வழங்காமல் வைத்திருக்கிறார்கள்.

மதுரை மண்டலத்தில் 2012-ம் ஆண்டில் மாவட்ட விருதுகள் வழங்கப்படவில்லை. நாட்டுப்புறக் கலைஞர்கள் பல வழிகளிலும் அழுத்தம் கொடுத்ததால் 4 ஆண்டுகளுக்கும் மொத்தமாக சேர்த்து மதுரை மண்டலத்தில் 20 பேர் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கடந்த பிப்ரவரியில் பட்டியல் வெளி யிட்டனர். ஆனால், தேர்தலைக் காரணம் காட்டி அந்த விருதையும் வழங்காமல் விட்டுவிட்டார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கலை பண்பாட்டுத் துறையின் திருச்சி மண்டல துணை இயக்குநரும் தஞ்சை, மதுரை மண்டலங்களுக்கான பொறுப்பு துணை இயக்குநருமான இரா.குண சேகரனிடம் கேட்டபோது, ‘‘மாவட்ட விருதுகளுக்கான பட்டியல் தயாராக இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் ஒரு அறைக்குள் வைத்து விருதை வழங்குவதைவிட தனியாக விழா வைத்து அதில் கலைஞர்களுக்கு விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும் என நினைக்கிறோம். பதினைந்து மாவட்டங்களுக்குப் பொறுப்பாளராக இருக்கிறேன். விருதுகள் வழங்க முடியாமைக்கு பணிச்சுமையும் பணியாளர் பற்றாக்குறையும் ஒரு காரணம்’’ என்றார்.

தேவா

மாநில அளவில் 6 ஆண்டு களாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படாமல் இருப்பது குறித்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவரான இசையமைப்பாளர் தேவாவிடம் கேட்டபோது, ‘‘முதல்வர்தான் கலைமாமணி விருதுகளை அறிவிக்க வேண்டும். 6 ஆண்டுகளாக அறிவிக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம் என்று நாங்கள் சொல்ல முடியாது’’ என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x