அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
Updated on
1 min read

சென்னை: ஜூலை 11 அன்று நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக்கூட்டத்துக்கு தடை கோரியும், அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினரான அம்மன் பி.வைரமுத்துவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து பொதுக்குழுக் கூட்டம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11 அன்று நடந்தது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து 2 வாரங்களில் தீர்வு காண வேண்டுமென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் வழக்கை விசாரித்தார்.ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி கடந்த வாரம் 2 நாட்களாக விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், 2 நாட்களில் விசாரணையை முடித்துக்கொண்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று (ஆக.17) தீர்ப்பளிக்கவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in