Published : 12 Aug 2022 04:00 AM
Last Updated : 12 Aug 2022 04:00 AM

உதவிப் பேராசிரியர் விவகாரம் | கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

கோவை அரசு கலைக் கல்லூரி நுழைவுவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள். படம்: ஜெ.மனோகரன்

கோவை

கோவை அரசு கலைக்கல்லூரியில் புகாருக்குள்ளான உதவி பேராசிரியர் மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேராசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை அரசு கலைக்கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 250-க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

உதவி பேராசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசுவதாக கல்லூரி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சில மாதங்களுக்கு முன் அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள கல்லூரிக்கு பணியிடம் மாற்றப்பட்டார். இதற்கிடையே, மீண்டும் அவர் கோவை அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புகார் குறித்து மறு விசாரணை நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கோவை கிளை சார்பில், அரசு கலைக்கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் வீரமணி தலைமை வகித்தார்.

கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் உலகி சம்பவ இடத்துக்கு வந்து பேராசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, வீரமணி கூறும்போது, ‘‘புகார் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு விட்டது. இவ்விவகாரத்தை மீண்டும் விசாகா கமிட்டி விசாரிக்கிறது. தற்போதைய கல்லூரி முதல்வர் இங்கு பணியில் இருக்கும் வரை விசாரணை முறையாக நடக்காது. எனவே, உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்து விட்டு விசாரிக்க வேண்டும்’’ என்றார்.

கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் உலகி கூறும்போது,‘‘அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய போராட்டம், அவர்கள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப் பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x