Last Updated : 09 Aug, 2022 09:25 AM

 

Published : 09 Aug 2022 09:25 AM
Last Updated : 09 Aug 2022 09:25 AM

அமர்நாத் ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டால் கீழடியில் அவசரம் காட்டிய தமிழக தொல்லியல் துறையினர்

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வை சரியாக மேற்கொள்ளவில்லை என மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் குற்றம்சாட்டினார். இதையடுத்து, தமிழக தொல்லியல் துறையினர் அவசரம், அவசரமாக செய்தியாளர்களை வரவழைத்து சில தொல்பொருட்களைக் காட்டினர்.

கீழடியில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணியை 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறை மேற்கொண்டது. இதன் மூலம் தமிழர் நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்தது. இதற்கிடையில் 3 கட்டத்துடன் அகழாய்வுப் பணிகளை மத்திய அரசு நிறுத்தியது. இதற்கு தொல்லியல் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, அப்போதைய அதிமுக அரசு, தமிழக தொல்லியல் துறை மூலம் அகழாய்வுப் பணியை மேற்கொண்டது. தொடர்ந்து நடந்த 4, 5 மற்றும் 6-ம் கட்ட அகழாய்வுகள் மூலம் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்தன.

ஆனால், 7-ம் கட்டம் மற்றும் தற்போது நடந்து வரும் 8-ம் கட்ட அகழாய்வுப் பணியில் எதிர்பார்த்த அளவு தொல்பொருட்கள் கிடைக்கவில்லை. மேலும் 8-ம் கட்ட அகழாய்வில் குறைந்த ஊழியர்களே ஈடுபட்டுள்ளதால் பணி மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகளும் பெரிதாக அக்கறை காட்டவில்லை. பணி முடிவடைய ஒரு மாதமே உள்ள நிலையில், குறைந்த அளவே தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், இரு நாட்க ளுக்கு முன்பு கீழடிக்கு வந்த தென்னிந்திய ஆலயத் திட்ட, மத்திய தொல்லியல்துறை கண்காணிப் பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தற்போது நடக்கும் அகழாய்வு சரியான இடத்தை தேர்வுசெய்து நடக்கவில்லை. அகழாய்வில் அனுபவம் உள்ளவர்களையே பணியமர்த்த வேண்டும். அப்போதுதான் சரியான முடிவு கிடைக்கும்.' என்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக தொல்லியல் துறையினர் அவசர, அவசரமாக நேற்று செய்தி யாளர்களை வரவழைத்து சில தொல்பொருட்களை காட்டினர். இதே வேகத்தை அகழாய்வுப் பணியிலும் காட்ட வேண்டு மென தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x