Published : 07 Aug 2022 05:35 PM
Last Updated : 07 Aug 2022 05:35 PM

முல்லைப் பெரியாறு அணை குறித்து அச்சம்தரும் வீடியோ: வெளியிட்டவர்கள் மீது கேரள அரசின் நடவடிக்கை கோரும் ஆர்.பி.உதயகுமார்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் வரிசெலுத்துவோர் நலச் சங்க சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கினார்.

மதுரை: ''முல்லைப்பெரியாறு அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்த அனிமேஷன் வீடியா வெளியிட்டவர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி வரி செலுத்துவோர் சார்பில், தமிழக அரசு விடுத்துள்ள வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்எஸ்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கொடுத்த மனுவினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் பெற்றுக்கொண்டு, அதை முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசசாமி கவனத்திற்கு கொண்டு சட்டப்பேரவையில் பதிவு செய்வோம் என்றார்.

அதன்பின் அவர் செய்தியாளரகளிடம் கூறியதாவது: ''முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி ஆட்சி காலத்தில் வரி உயர்த்தும் சூழ்நிலை ஏற்பட்ட போது, அதை மக்களிடத்தில் திணிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால், தற்போதைய முதல்வர் வரியை உயர்த்த மாட்டேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார், ஆனால் இன்றைக்கு 150 சதவீதம் அளவில் வரியை உயர்த்தி உள்ளார். தற்போது தமிழகத்தில் 80 லட்சம் வீட்டு வரி செலுத்துவோர் உள்ளனர்.

இதில் 601 முதல் 1200 சதுர அடி வரை வீடு கட்டிய சாமானிய மக்கள் தான் வசித்து வருகின்றனர், ஆனால் அவர்களுக்கு வரியை சுமத்தி கொடுங்கோல் ஆட்சியை திமுக அரசு நடத்தி வருகிறது. மக்களை வாட்டும் வீட்டு வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் 75 மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதியை, கிடப்பில் போட்டுவிட்டு தற்போது திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு, விளம்பர அரசாக செயல்படுகிறது. டிவியை திறந்தால் முதல்வர் முகத்தைத் தான் பார்க்க முடிகிறது. ஆட்சி சக்கரத்தை நடத்தி மக்களுக்கான, திட்டங்களை எதையும் செய்யவில்லை.

முல்லை பெரியாறு பிரச்சனையில் மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் ஜெயலலிதா. ஆனால், தற்போது தமிழக அரசு அணை நீர்மட்டத்தை 142 ஆக உயர்த்தாமல் முல்லை பெரியாறு மூலம் பத்து மதகுகளில் மூலம் 3000 கனஅடிக்கு மேல் கேரளாவுக்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் மூன்று முறை முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக தேக்கப்பட்டது. இது ஒன்றும் முடியாத காரியம் அல்ல.

அதுபோல் காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை, கர்நாடக அரசு மதிக்கவில்லை. இந்த விவகாரங்களில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால், சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்கள் ராஜஸ்தான் போல பாலைவனமாக மாறிவிடும்.

கேரளா அரசின் அழுத்தத்தை தமிழக அரசு தள்ளுபடி செய்து, ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார பிறப்பு உரிமையை காப்பாற்றி, அணை நீர்மட்டம் 142 அடியாக தேக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தற்போது கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை குறித்து, அனிமேஷன் செய்த வீடியோ நெஞ்சத்தை அச்சம் கொள்ளும் வகையில் உள்ளது. இரு மாநில உறவுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், இந்திய அமைப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை செய்தவர்கள் மீது கேரளா அரசு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x