திருத்தணி | பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயார், ஊராட்சி தலைவர் வீடு உட்பட ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் இடித்து அகற்றம்: வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருவாலங்காடு அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை நேற்று வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றினர்.
திருவாலங்காடு அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை நேற்று வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றினர்.
Updated on
1 min read

திருத்தணி: திருவாலங்காடு அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் மற்றும் தொழுதாவூர் ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோர் கட்டியிருந்த வீடு உள்ளிட்ட கட்டிடங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே உள்ள தொழுதாவூரில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் வெள்ளைக்குட்டை என்ற நீர்நிலையை ஆக்கிரமித்து, அதே கிராமத்தைச் சேர்ந்த, பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் அருணோதயா, திமுகவின் மாவட்ட விவசாய அணி நிர்வாகியும் தொழுதாவூர் ஊராட்சித் தலைவருமான அருள்முருகன் உட்பட 7 பேர் வீடுகள், கடை என 9 கட்டிடங்களை கட்டியுள்ளனர்.

அதனை அகற்ற வேண்டும் என அதே ஊரைச் சேர்ந்த ரேணுகா, கடந்த 2020-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்‌. இதில் வெள்ளைக்குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில், கடந்த ஆண்டு இறுதியில், 2 முறை வருவாய்த் துறையினர் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அளித்தனர்.

இதற்கு எதிராக அருள்முருகன் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை கடந்த ஏப்ரலில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள், தமிழ்நாடு நில ஆக்ரமணச்சட்டம் 10 அ 1-ன்படி அரசிடம் மேல்முறையீடு செய்தனர். அதனை கடந்த மாதம் அரசு நிராகரித்தது.

இதையடுத்து, நேற்று திருத்தணி கோட்டாட்சியர் ஹசரத் பேகம் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு வீடுகள், கடை ஆகியவற்றை பொக்லைன் மூலம் அகற்றினர். இதன்படி 6 வீடுகளை முழுமையாக இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பு காரணமாக, குட்டை நிலத்தில் கட்டப்பட்டிருந்த நியாயவிலைக் கடை, இ- சேவை கட்டிடம், நூலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களையும் அதிகாரிகள் அகற்றினர்.

காலை முதல், மாலை வரை நீடித்த இப்பணியில், பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் அருணோதயாவின் 2 வீடுகளில் ஒரு வீடு மட்டுமே அகற்றப்பட்டது. மற்றொன்றையும் அகற்ற வேண்டும் எனக் கூறி, ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, அவர்களிடம் பேசிய வருவாய்த் துறை அதிகாரிகள், இருட்டாக இருப்பதால் மற்றொரு வீட்டை நாளை அகற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in