

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது.
அதன்படி, விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 7,045 மாணவர்கள் சேர்க்கைக்கு பதிவு செய்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 70 ஆயிரம் பேர் வரை கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தனர்.
அதில் 3 லட்சத்து 34,765 பேர் முழுமையாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, 2 லட்சத்து 98,056 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர். விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கல்லூரி அளவிலான தரவரிசைப் பட்டியல் 3-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த தரவரிசை பட்டியல் அடிப்படையில் இன்று முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சிறப்பு விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.