

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஆண்டெனி கிளமெண்ட் ரூபின் என்பவர், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் கடந்த 2020-ல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும 14வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இது அமலுக்கு வந்தது.
ஆனால், இதை செயல்படுத்த, தொடர்புடைய அரசுத் துறைகள்ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சந்தைகளில் சில வகையான பிளாஸ்டிக் பொருட்கள் இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, பிளாஸ்டிக் தடை அரசாணையை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான தீர்ப்பை, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் நேற்று முன்தினம் வழங்கினர். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 2016-ல் கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கட்டாயம் செல்படுத்த வேண்டும். குறிப்பாக, பிளாஸ்டிக் மூலமாக நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, பிளாஸ்டிக் மேலாண்மையில் உள்ள பொறுப்பு குறித்த வழிகாட்டுதல்களையும் செயல்படுத்த வேண்டும்.
விதிமீறல்கள் இருந்தால், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிக்கவேண்டும். ஒருமுறை பயன்படுத்திதூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்பொருட்கள் மீதான தடை செயல்படுத்தப்படுவதை சுற்றுச்சூழல்மற்றும்வனத் துறைச் செயலர் கண்காணிக்க வேண்டும்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோருடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை, அவற்றுக்கான மாற்றுப் பொருட்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல, கல்வித் துறை,மாநில சட்டப் பணிகள் ஆணையம்ஆகியவற்றுடன் இணைந்து, பிளாஸ்டிக் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.