Published : 03 Aug 2022 07:58 AM
Last Updated : 03 Aug 2022 07:58 AM

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள இடத்துக்கு மாற்றாக வழங்கும் இடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு

சென்னை

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கடந்த 35 ஆண்டுகளாக தங்களது கட்டுப்பாட்டில்உள்ள 31.37 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும், அதற்கான தொகையை செலுத்துவதாகவும் கோரியிருந்தது.

ஆனால் இந்தக் கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு, அந்த நிலத்தை 4 வார காலத்துக்குள் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று வட்டாட்சியர் மூலமாக நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சாஸ்த்ராபல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், அரசு புறம்போக்குநிலத்துக்குப் பதிலாக மாற்றுஇடம் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்

ஆனால், அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் அதற்கு ஆட்சேபம் தெரிவித்து, ‘‘அந்தப் பல்கலைக்கழகம் கடந்த 35 ஆண்டுகளாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பிவிட்டு, தற்போது மாற்று இடம் வழங்குவதாகக் கூறுவதை ஏற்கமுடியாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென இந்த நீதிமன்றம்தான் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்த பல்கலைக்கழகமும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளது" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அளித்துள்ள விண்ணப்பத்துக்கு 3நாட்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆக. 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x