சரக்கு வாகனங்களுக்கான பதிவு, தகுதிச் சான்றுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

சரக்கு வாகனங்களுக்கான பதிவு, தகுதிச் சான்றுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கனரக சரக்கு வாகனங்களுக்கான பதிவுச் சான்று மற்றும் தகுதிச் சான்றைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ரூ.1,500-ஆகவும், நடுத்தர சரக்கு வாகனங்களுக்கான பதிவுச் சான்று மற்றும் தகுதிச் சான்று புதுப்பித்தல் கட்டணத்தை ரூ.1,300-ஆகவும் உயர்த்தி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் கடந்த 2021 அக்டோபரில் அறிவிக்கை வெளியிட்டது.

இதேபோல, பதிவுச் சான்றைப் புதுப்பிக்கத் தாமதமாகும் ஒவ்வொரு மாதத்துக்கும் ரூ.500-ம்,தகுதிச் சான்றைப் புதுப்பிக்க ஆகும் தாமதத்துக்கு நாளொன்றுக்கு ரூ.50-ம் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு மாநிலலாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர்குமாரசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், மத்திய அரசின் கட்டண உயர்வு மற்றும் கூடுதல் கட்டண அறிவிப்பு என்பது சட்டவிரோதமானது. கடந்த 2016-ம் ஆண்டு இதேபோல கூடுதல் கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அனைத்து வாகனங்களுக்கும் பதிவுச் சான்று, தகுதிச் சான்று புதுப்பிக்க ஒரே நடைமுறையைப் பின்பற்றும் நிலையில், சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அதிக கட்டணம் வசூலிப்பது தன்னிச்சையானது என்பதால், இந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக மத்திய,மாநில அரசுகள் 6 வாரங்களில்பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in