

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி பள்ளியில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவியின் உடல், உடற்கூராய்வுக்குப் பின்னர் மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவள்ளூர் கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றினர். மேலும், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர். கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணங்கள் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவின்படி, திருவள்ளூர் மாணவி மரணம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவியின் உடலை வாங்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறுத்துவந்தனர். இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், மாணவிக்கு இன்று உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த உடற்கூறாய்வு முழுவதும் வீடியோப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர். இதன்பின்னர், மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான தெக்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
தெக்களூரில் போராட்டம்: மாணவியின் மரணத்துக்கான காரணத்தை தெரிவிக்கக் கோரி மாணவியின் சொந்த ஊரான தெக்களூரில், அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, மாணவியின் சொந்த ஊரிலும், மாணவி படித்த பள்ளியிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.