அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் கொள்ளை புகார்: ஓபிஎஸ் மீது வழக்குப் பதிவது குறித்து காவல் அதிகாரிகள் சட்ட ஆலோசனை

அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் கொள்ளை புகார்: ஓபிஎஸ் மீது வழக்குப் பதிவது குறித்து காவல் அதிகாரிகள் சட்ட ஆலோசனை
Updated on
2 min read

சென்னை: அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் குறித்தும், ஆவணங்கள் கொள்ளைபோனதாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்தும் புகாருக்குள்ளான ஓ.பன்னீர்செல்வம் மீது எத்தகைய சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் காவல் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. அன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், தன் ஆதரவாளர்களுடன் சென்றார். கே.பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் தரப்பினர் உள்ளே செல்லாதபடி வெளியே காவலுக்கு நின்றனர்.

அப்போது, ஓபிஎஸ் தரப்பினர் பூட்டியிருந்த அலுவலக கதவை உடைத்து உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 400 பேர் மீது ராயப்பேட்டை காவல் நிலைய போலீஸார் 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டு, சாவியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான கே.பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி சீல் அகற்றப்பட்டு சாவியும் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அதிமுக அலுவலகத்தில் கட்சியினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனது தெரியவந்தது. எனவே முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று முன்தினம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், "தலைமை அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம், 300 அடியாட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அலுவலகம் வந்தார். அவருடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் உட்பட மேலும் சிலரும் சேர்ந்து அவ்வை சண்முகம் சாலையில் இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி, பொதுமக்களை தாக்கியபடி வந்தனர்.

தலைமை அலுவலகம் பூட்டிக்கிடப்பதை பார்த்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்தவர்கள் அடியாட்களுடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர், அலுவலகத்தை சூறையாடி, அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வமும், அவருடன் வந்தவர்களும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தபடி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 300 பேர் மீது மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை, வழக்குப் பதிவு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் காவல் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சட்ட நிபுணர்களின் பரிந்துரைப்படி அடுத்தக் கட்ட நடவடிக்கை இருக்கும் என காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்களின் பட்டியல் ஏற்கெனவே போலீஸாரிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. வீடியோ பதிவுகளை ஆராய்ந்து விவரங்களை போலீஸார் சேகரித்து வைத்துள்ளனர்.

இரு தரப்பைச் சேர்ந்த 400 பேர் மீது ராயப்பேட்டை போலீஸார் 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in