

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்கு வித்திட்டதாக கருதப்படும் மாணவி ஸ்ரீமதி பெயரிலான வாட்ஸ்அப் குழுவில் தகவல்களை பதிவிட்ட நபர்களின் செல்போன் எண்களின் பதிவுகளை சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக சர்ச்சை நிலவுகிறது. மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதனிடையே சிலர், ‘ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து, மாணவி ஸ்ரீமதி பெயரில் வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கினர். அதில் விருப்பமுள்ளவர்கள் பலர் தானாகவே இணையும் வகையில் லிங்க் ஒன்றையும் உருவாக்கி, பகிர்ந்துள்ளனர்.
10 பேர் கைது
இதில் தமிழகம் முழுவதும் மாணவி உயிரிழப்புத் தொடர்பாக பல்வேறு தகவல்களையும், போராட்ட நிகழ்வுகளையும், ‘Justice for Srimathi’ என்ற வாசகங்களுடன் தகவல் பரிமாறியுள்ளனர்.
மாணவி உயிரிழப்பு ஒருபுறம் நடந்தது என்றால், மறுபுறம் வன்முறை சம்பவத்துக்கு சமூக வலைதளம் முக்கிய பங்கு வகித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களை பரப்பியதாக மாநிலம் முழுவதும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக் குழு
இதையடுத்து, கலவரத்துக்கு காரணமான சமூக வலைதள நபர்களை கண்டறிய சைபர் கிரைம் எஸ்.பி சண்முகப்பிரியா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி ஆய்வாளர் சண்முகம் உள்ளிட்ட 20 பேர் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சமூக வலைதள பதிவுகள், அவர்களின் செல்போன் எண்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் பதிவிட்ட விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும், தற்போது வரை இவ்விஷயத்தில் பதிவிட்டு வரும் நபர்கள் யார் யார்? என ஆய்வு செய்து அதில் 1,247 நபர்களின் செல்போன் எண்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து அது குறித்த விவரம் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.