

மதுராந்தகம்: சூனாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர் பேரவை சங்கம் சார்பில் வழங்கப்பட்ட பேருந்தை, பள்ளி நிர்வாகத்திடம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்பேரவை சார்பில் பள்ளியில் படிக்கும் சுற்றுப்புற மாணவர்களுக்காக ரூ.13 லட்சம் மதிப்பிலான பேருந்து வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், குறு, சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பள்ளி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
சிறப்பாக கல்வி பயில வேண்டும்
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனால், அரசு பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் சிறப்பாக கல்வி பயிலவேண்டும். பெற்றோர், பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
நூறாவது ஆண்டு விழா
முன்னதாக பேசிய மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், “சூனாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மூலம் மற்ற பள்ளிகளுக்கு இப்பள்ளி முன்னுதாரணமாக விளங்குகிறது. அடுத்த ஆண்டு இப்பள்ளி நூறாவது ஆண்டு விழாவை காண உள்ளது. அதனால், பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்த தரப்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் க.சுந்தர், பனையூர் பாபு,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சு.க.விடுதலைசெழியன், தலைமை ஆசிரியர் க.ராஜலிங்கம் மற்றும் மாணவர்கள், பெற்றோர், அரசுஅதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.