Last Updated : 15 May, 2016 02:38 PM

 

Published : 15 May 2016 02:38 PM
Last Updated : 15 May 2016 02:38 PM

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் குளித்த போது பரிதாபம்: நீரில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி

கிருஷ்ணகிரியில் கிணற்றில் குளித்த போது, நீரில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனப்பள்ளி ஊராட்சி பெரியபாறைபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவரது மனைவி காளியம்மாள். இவர்களது நந்தகுமார்(11), கனகவேல்(9) என்ற இரு மகன்களும், ஜமுனா(10) என்கிற மகளும் உள்ளனர். முருகேசனின் உறவினர் ராயக்கோட்டைச் சேர்ந்த பழனி. இவரது மகன் தமிழரசன்(18), மகள் ஜோதிகா(14).

தற்போது பள்ளி விடுமுறை என்பதால், 10 நாட்களுக்கு முன்பு ஜோதிகா, பெரியபாறைபள்ளம் கிராமத்திற்கு வந்தார். இன்று காலை தமிழரசனும் முருகேசன் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையடுத்து, இன்று காலை 10 மணியளவில், தமிழரசன், ஜோதிகா, நந்தகுமார், ஜமுனா, கனகவேல் ஆகியோர், வீட்டிலிருந்து சுமார் 500 அடி தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர். கனகவேல் மட்டும் கிணற்றின் மீது உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது கிணற்றில் குளித்து கொண்டிருந்தவர் 4 பேரும், திடீரென நீரில் மூழ்கினர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கனகவேல், வீட்டிலிருந்தவர்களுக்கு தகவல் அளித்தார். அங்கு திரண்ட பொதுமக்கள், கிணற்றில் மூழ்கிய 4 பேரையும் மீட்கும் முயற்சி ஈடுபட்டனர். அதற்குள் தமிழரசன், ஜோதிகா, ஜமுனா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில், மீட்கப்பட்ட நந்தகுமார், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவலறிந்த வந்த பர்கூர் டிஎஸ்பி ஈஸ்வரமூர்த்தி, கந்திக்குப்பம் போலீஸார் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

3 பள்ளி மாணவர்கள்

உயிரிழந்த நந்தகுமார் - கம்மம்பள்ளி அரசு பள்ளியில் 6-ம் வகுப்பும், ஜமுனா காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 6-ம் வகுப்பும், ஜோதிகா, ராயக்கோட்டை அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர். தமிழரசன், பிளஸ் 2 வரை படித்துவிட்டு, ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இச்சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விடுமுறை நாளில் கவனம் தேவை

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விடுமுறை தினங்களில் நீர்நிலைகளில் குளிக்க செல்லும் மாணவர்கள், நீச்சல் தெரியாமலும், ஆழப்பகுதியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. நீச்சல் நன்கு தெரிந்த பெரியவர்கள் துணையின்றி குழந்தைகளை கிணறு, ஏரி, குளங்களில் குளிக்க அனுப்பக்கூடாது. நீரில் விளையாடும் ஆர்வத்தில், தங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை அறியாமல் ஆழமான பகுதியில் சென்று மூழகுழந்தைகள் இறப்பது அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில், பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என சமூகு ஆர்வலர்கள் சிலர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x