Published : 12 Jul 2022 11:59 AM
Last Updated : 12 Jul 2022 11:59 AM

அதிமுக தலைமை அலுவலகம் அருகே மோதல்: 400 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே நேற்று (ஜூலை 11) மோதலில் ஈடுபட்ட 400 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே நேற்று நடந்த மோதல் குறித்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்களின் அடிப்படையில், இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் என மொத்தம் 400 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் 47 பேர், 2 போலீஸார் காயமடைந்தனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுகதொண்டர்களை இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாங்கள் புகார் கொடுத்தும் போலீஸார் முழு பாதுகாப்பு வழங்கவில்லை.

அலுவலகஆவணங்களை எல்லாம் சமூக விரோதிகள் அள்ளிச் சென்றுள்ளனர். இந்த சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் அத்துமீறி கட்சி தலைமை அலுவலகத்துக்குள் ரவுடிகளுடன் நுழைந்து, கட்சி நிர்வாகிகளை தாக்கியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த தாக்குதல் என்பது திமுக அரசும், ஓபிஎஸ்ஸும் இணைந்து போட்ட திட்டம். நீதிமன்றத்தில் நியாயத்தைப் பெற்று, அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்படும் என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x