Published : 29 May 2016 12:46 PM
Last Updated : 29 May 2016 12:46 PM

ஆட்டோக்களின் அதிக கட்டணத்தால் தமிழகத்தில் பொதுமக்கள் பாதிப்பு: மதிக்கப்படாத உத்தரவுகள்; கண்காணிக்காத அதிகாரிகள் - நடவடிக்கை எடுக்குமா அரசு?

அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இப்பிரச்சினையில் முதல்வர் நேரடியாக தலையிட்டு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு கடந்த 2013 ஆகஸ்ட் 25-ம் தேதி அறிவித்தது. அதன்படி, 1.8 கி.மீ. தூரத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, அதன் பிறகு, ஒரு கி.மீ.க்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதே கட்டண முறை அடுத்த 6 மாதங் களில் தமிழகம் முழுவதும் உள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் ஆட்டோக் களுக்கும் படிப்படியாக நடை முறைப்படுத்தப்பட்டது.

ஆட்டோக்களில் பொருத்த ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண் காணிப்பு) தொழில்நுட்ப வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள் 2014 பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அரசு அறிவித் தது. 2 ஆண்டுகள் ஆகியும் டிஜிட் டல் மீட்டர்கள் இதுவரை வழங்கப் படவில்லை.

ஆட்டோக்களுக்கு அரசு நிர் ணயித்த புதிய கட்டண முறை அமலுக்கு வந்தபோது, அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க போக்குவரத்து ஆணையரகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நடவடிக் கைகள் தற்போது முடங்கியுள்ள தால், ஆட்டோ ஓட்டுநர்கள் மக்களிடம் மீண்டும் பேரம் பேசி வசூலிக்க தொடங்கிவிட்டனர்.

குறைந்தபட்ச கட்டணமாக ஏற்கெனவே ரூ.60 வசூலித்தவர்கள் தற்போது ரூ.100 என உயர்த்தி வசூலிக்கின்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்கும் மக்கள் வேறு வழியின்றி அதிக பணம் கொடுத்து, ஆட்டோவில் செல் கின்றனர்.

ஊழியர் பற்றாக்குறை காரணம்

போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியபோது, ‘‘அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைதான் ஆட்டோ ஓட்டுநர்கள் வசூலிக்கிறார் களா என்று கண்காணிக்க மாதந்தோறும் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். அதே நேரம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) வழக்கமான பணிகள், பள்ளி வாகனங்களில் ஆய்வு, பண்டிகை நாட்களில் தனியார் பஸ்களில் ஆய்வு போன்ற பணிகளும் அதிகம் இருக்கின்றன.

போக்குவரத்து ஆணையரகத்தில் ஏற்கெனவே 30 சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணிகள் தேங்குகின் றன. ஆட்டோ கட்டணம் தொடர்பான குறைகள், புகார்களை, 18004255430 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கும் வசதி உள்ளது. இதை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி, தீவிர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

முறைப்படுத்த நடவடிக்கை

ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியூசி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறியதாவது:

ஆட்டோவுக்கு அரசு புதிய கட்டணம் நிர்ணயம் செய்தபோது, 2014 பிப்ரவரிக்குள் டிஜிட்டல் மீட்டர் வழங்கப்படுவதாக கூறியது. இதுவரை வழங்கப்படவில்லை. புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட போது, 75 சதவீத ஆட்டோ ஓட்டுநர் கள் மீட்டர்படி நியாயமான கட்ட ணம்தான் வசூலித்தனர். அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்திவிட்டனர்.

மேலும், ஆட்டோக்கள் போல தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் அபே வாகனங்கள், 10 ஆயிரம் டாடா மேஜிக் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றை முறைப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உடனடியாக இலவச டிஜிட்டல் மீட்டர் வழங்க வேண்டும். எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றியமைக்க முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை முறைப்படுத்த முதல்வர் நட வடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் தொழிலாளர்களால் ஆட்டோ ஓட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு விதியை மீறலாமா?

தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் டி.சடகோபன் கூறியபோது,

‘‘அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வாங்காமல், எரிபொருள் விலை உயர்வை காரணம் காட்டி சாதாரண மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது சரியல்ல. ஆட்டோ உரிமையாளர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை அரசிடம் பேசிதான் தீர்வு காண வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் ஆட்டோ போக்குவரத்து முக்கியமானதாக ஆகிவிட்டதால், தமிழக அரசு அதை முறைப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x