

சென்னை: பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், கோவையிலிருந்து ஷீரடிக்கு இயக்கப்பட்ட முதல் தனியார் ரயில்சேவை மூலமாக, ரூ.2.50 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்திய மற்றும் வெளிநாட்டு மக்கள், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களையும், பாரம்பரிய, கலாச்சார சிறப்புமிக்க இடங்களையும் சுற்றிப்பார்க்கும் வகையில், பாரத் கவுரவ் திட்டத்தை இந்திய ரயில்வே கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ், தனியார் ரயில் சேவை அளிக்க விரும்புவோர், தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அழைப்பு விடுத்தது. இதையடுத்து, சவுத் ஸ்டார் ரயில் என்ற நிறுவனம் பதிவு செய்து, கோயம்புத்தூர்-ஷீரடிக்கு பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் முதல் சேவையைத் தொடங்கியது.
இதேபோல, டிராவல் டைம்ஸ் இந்தியா நிறுவனம் பதிவுசெய்து, இரண்டாவது ரயில் சேவையை மதுரையில் இருந்து வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. `திவ்ய காசி-ஆடி அமாவாசை காசி யாத்திரை ரயில்' என்ற பெயரில் இந்த ரயில் இயக்கப்படஉள்ளது.
இதேபோல, 7 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்து, அடுத்தடுத்து ரயில் சேவையை அளிக்க உள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் வி.ஜெயந்தி கூறும்போது, "பாரத்கவுரவ் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர்- ஷீரடிக்கு ரயில் சேவை இயக்கப்பட்டது.
இதன்மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.2.50 கோடி வருவாய் கிடைத்தது. டிராவல் டைம்ஸ் இந்தியா நிறுவனம் 2-வது ரயில் சேவையை வழங்க உள்ளது. இந்த நிறுவனம் மூலமாக எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதை இப்போது கூறமுடியாது. எத்தனை நாட்கள் பயணம், தொலைவு ஆகியவற்றின் அடிப்படையில் வருவாய் கணக்கிடப்படும். இதேபோல, 7 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்து, பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் ரயில்களை இயக்க உள்ளன" என்றார்.