Published : 05 Jul 2022 03:50 PM
Last Updated : 05 Jul 2022 03:50 PM

ரேசன் பொருட்கள் 98% பயோ மெட்ரிக் முறையில் விநியோகம்: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு 

சென்னை: ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு தொடர்பாக இன்று டெல்லியில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி கலந்து கொண்டு பேசுகையில், " தமிழ்நாடு அரசு ,அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்திட கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

01.11.2016 முதல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், 2013 அமல்படுத்தப்பட்ட நிலையிலும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நிலையினைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது.

தமிழக மக்களுக்குச் சத்தான உணவுப் பொருட்கள் வழங்கும் பொருட்டு ‘சிறப்பு பொது விநியோகத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, ஒரு கிலோ துவரம் பருப்பு,ஒரு கிலோ ஆட்டா மாவு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை மானியம் அதிகம் கொடுத்து குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பள்ளிகளுக்குச் செல்லும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மதிய உணவு திட்டத்தின் கீழ் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முட்டை வழங்கும் திட்டம் 1989ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2010ம் ஆண்டில் வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கும் முட்டை வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது.

இதுமட்டுமில்லாமல், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருட்களும் ரூ.4000 ரொக்கத் தொகையும் 2021 ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கியதோடு 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகையான ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்களையும் வழங்கியது.

தமிழ்நாட்டிலுள்ள பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளில் 98 சதவீதம் கைவிரல் ரேகை பதிவு மூலம் நடைபெறுகிறது. இதனால் உரிய குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவது உறுதி செய்யப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பதை இந்த நேரத்தில் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட பல்முனை வறுமைக்குறியீடு அறிக்கையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4.98 % மட்டுமே ஏழ்மையில் உள்ளனர் என்றும் ஆனால் இந்தியா முழுமைக்கும் 25.01 % பேர் ஏழைகளாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருப்பது இச்சாதனைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

தொலைநோக்குப் பார்வையுடன் முதல்வர் வழிகாட்டுதலில் மத்திய அரசுடனும், இதர மாநில அரசுகளுடனும் ஒன்றிணைந்து நம் நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட உறுதுணை புரிவோம் என்று நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x