தஞ்சை அருகே குளத்தில் 5 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

தஞ்சை அருகே குளத்தில் 5 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
Updated on
1 min read

தஞ்சாவூர் புன்னைநல்லூர் அருகே குளத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 600 கிலோ எடை கொண்ட 5 ஐம்பொன் சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டன.

தஞ்சாவூர்- நாகை சாலையில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலை அடுத்த பவளக்காரன் சாவடி குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிலர் டிராக்டர்களை கழுவி சுத்தம் செய்தபோது, தண்ணீருக்குள் சுவாமி சிலைகள் இருப்பதைக் கண்டனர்.

அவர்கள், அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற பாபநாசம் வட்டாட்சியர் அருண்மொழி, டிஎஸ்பி சிவாஜி அருட்செல்வன், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் குளத்தை பார்வையிட்டு, அதில் கிடந்த 5 சிலைகளையும் கைப்பற்றினர்.

600 கிலோ எடை

அவை 3 அடி உயரமுள்ள அய்யனார் சிலை, இரண்டரை அடி உயரமுள்ள பூர்ணா மற்றும் புஷ்கலா அம்மன் சிலைகள், ஒரு அடி உயரமுள்ள காளியம்மன் மற்றும் மாரியம்மன் ஐம்பொன் சிலைகள் என்பதும் பல லட்சம் மதிப்பு கொண்டவை என்பதும் தெரிந்தது. இவற்றின் மொத்த எடை 600 கிலோ.

கைப்பற்றப்பட்ட சிலைகள் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், இந்த 5 சிலைகளும் கடந்த மாதம் 25-ம் தேதி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் உள்ள பாலையூர் அம்மன் கோயிலில் இருந்து திருடப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட சுவாமி சிலைகள் மீண்டும் கிடைத்துள்ளதை அறிந்த பாலையூர் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இச்சிலைகள் திருட்டில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in