Published : 30 Jun 2022 08:38 PM
Last Updated : 30 Jun 2022 08:38 PM

528 ஆக்கிரமிப்புகள் அகற்றம், 94 கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு: சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டல பறக்கும் படைக் குழுவினரால் 528 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 94 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளை அகற்றுதல், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளைத் துண்டித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டல பறக்கும் படைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் மண்டல செயற்பொறியாளர் தலைமையில் ஒரு உதவி செயற்பொறியாளர், ஒரு உதவி இளநிலை பொறியாளர், ஒரு மின் துறை உதவிப் பொறியாளர், 10 சாலைப் பணியாளர்கள் மற்றும் 5 மலேரியா பணியாளர்கள் என மொத்தம் 18 நபர்கள் உள்ளனர். கட்டிடக் கழிவுகளை அகற்ற 1 பாப்காட் (sb cat) இயந்திரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற 1 ஜேசிபி (JCB) இயந்திரம் மற்றும் இவற்றை கொண்டு செல்ல 1 லாரி (Lorry) மினி வேன் (Mini Van) வழங்கப்பட்டுள்ளது,

இக்குழுவானது வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் முக்கியச் சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் மழைநீர் வடிகால் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

மேலும், மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்பை ஏற்படுத்தியுள்ள நபர்கள் ஆகியோர் மீது அபராதமும் இக்குழுவால் விதிக்கப்பட்டு வருகிறது.

இக்குழுவினர் இன்று 15 மண்டலங்களில் 528 ஆக்கிரமிப்புகள் அகற்றியுள்ளனர். மேலும் 406.64 மெட்ரிக் டன் அளவிலான கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டு, மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டிருந்த 94 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

எனவே, ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், பொது இடங்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் மண்டல பறக்கும் படைக்குழுவினரால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x